Published : 14 Oct 2021 05:54 AM
Last Updated : 14 Oct 2021 05:54 AM

தொழிலாளி கொலை வழக்கில் - திமுக எம்.பி. ரமேஷிடம் 4 மணி நேரம் விசாரணை : மீண்டும் சிறையில் அடைப்பு

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்த திமுக எம்.பி. ரமேஷிடம் சிபிசிஐடி போலீஸார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் கடலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

பண்ருட்டி முந்திரி ஆலை தொழிலாளி கொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆலை உரிமை யாளரும் கடலூர் மக்களவை தொகுதி திமுக உறுப்பினருமான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ், கடந்த 11-ம் தேதி பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கடலூர் கிளைச் சிறையில் அடைக் கப்பட்ட அவருக்கு, கரோனா தொற்று பரிசோதனை செய் யப்பட்டது. ‘தொற்று இல்லை’ என உறுதியானதால், நேற்று காலை கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ரமேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ரமேஷை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி கடலூர் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் தீபா மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, ஒருநாள் மட்டும் (அக்.13-ம் தேதி மதியம் 1.15 மணியில் இருந்து 14-ம் தேதி 1.15 மணி வரை) காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு அனுமதி அளித்து நீதிபதி பிரபாகர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் தீபா, அமல்ராஜ் ஆகியோர் ரமேஷை கடலூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத் துக்கு அழைத்துச் சென்று 4 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், அவரை நேற்று மாலை மீண்டும் தலைமை குற்ற வியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். ரமேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரபாகர் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் ரமேஷை கடலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x