Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM
முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் வாங்க ரூ.25 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசின் கரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கைகொடுக்கும் வகையில் அனைவரும் நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, நேற்று வரை ரூ.280.20 கோடி நன்கொடையாக பெறப்பட்டது. இந்த நிதி, கரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று முதல்வர் உறுதி அளித்திருந்தார். இதுவரை பெறப்பட்டுள்ள நிதியில் இருந்து ரெம்டெசிவிர் போன்ற உயிர்காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கவும், மற்ற மாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜனை ரயில் மூலம் கொண்டுவருவதற்கு தேவை யான கண்டெய்னர்களை வாங்கவும் முதல் கட்டமாக ரூ.50 கோடியை ஒதுக்கினார். அதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக கரோனா பரிசோதனைக்கான ஆர்டி-பிசிஆர் கிட்களை வாங்க ரூ.50 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கினார்.
இதையடுத்து, சிப்காட் மூலம் சிங்கப்பூர் மற்றும் பிற அயல்நாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவ கருவிகள் வாங்க ரூ.41.40 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு தேவைப்படும் ஆம்போடெரிசின் உள்ளிட்ட அனைத்து உயிர்காக்கும் மருந்துகளையும் வாங்க, ரூ.25 கோடியை பொது நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT