Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

கரோனா பரவலை தடுக்க நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் - தமிழகத்தில் திருவிழாக்களுக்கு தடை : உள்ளூர், வெளியூர் செல்லும் பேருந்துகளில் நின்றபடி பயணிக்க அனுமதியில்லை

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட் டங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப் படுவதாகவும், கோயம்பேடு உள்ளிட்ட மொத்த காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகள் செயல்பட அனுமதி யில்லை என்றும் தமிழக அரசு தெரி வித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்றை தடுக்க, வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக நிலவும் சூழலை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறை செயலர் தலைமையில், நிதித்துறை செயலர், வருவாய் நிர்வாக ஆணையர், சுகாதாரத் துறை செயலர் ஆகியோரைக் கொண்ட குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அனு மதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடு களுக்கு முற்றிலுமாக தடை விதிப்பதும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு களுடன் அனுமதி அளிப்பதும் அவசிய மாகிறது.

அதன்படி, மறுஉத்தரவு வரும் வரை மத்திய உள் துறையால் அனுமதிக்கப் பட்ட வழித்தடங்கள் தவிர, சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை தொடரும்.

l நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில், எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

l திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10-ம் தேதி (நாளை) முதல் தடை விதிக்கப்படுகிறது.

l நாளை முதல் கோயம்பேடு வணிக வளாகம் மற்றும் மாவட்டங்களில் உள்ள மொத்த காய்கனி வளாகங் களில் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

கட்டுப்பாடுகள்

l தொழிற்சாலைகள், வணிக வளா கங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணியாளர்கள், அலு வலர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படு வதுடன், சானிடைசர் பயன்பாடு, முகக் கவசம் அணிவதையும் சம்மந்தப் பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

l தொழிற்சாலைகளில் பணியாளர் களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர் வாகம் செய்ய வேண்டும். நடைமுறை களை பின்பற்றாத தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

l மாவட்டங்களுக்கு இடையிலான அரசு, தனியார் பேருந்து மற்றும் சென்னை மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம். நினறு கொண்டு பயணிக்க அனுமதி இல்லை.

l புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர் நாடகா செல்லும் பேருந்துகளிலும் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம்.

l காய்கறி, பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள் , அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரே நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்படலாம்.

l உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் இரவு 11 மணிவரை அமர்ந்து உணவருந் தலாம். இரவு 11 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்படும்.

l கேளிக்கை விடுதிகள், பொழுது போக்கு பூங்காக்கள், பெரிய அரங்கு கள், உயிரியல் பூங்காக்கள், அருங் காட்சியகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

l ஒன்றுக்கு மேற்பட்ட திரைகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள திரை யரங்குகள் உட்பட அனைத்து திரை யரங்குகளிலும் 50 சதவீத இருக்கை களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப் படும்.

l உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 நபர்கள் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

l திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ளலாம்.

l விளையாட்டு அரங்கம், மைதானங் களில் பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடத்தலாம். நீச்சல் குளங் களில் விளையாட்டுப் பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.

l பொருட்காட்சி அரங்கங்கள் வர்த் தகர்களுக்கு இடையேயான செயல் பாடுகளுக்கு மட்டும் அனுமதிக் கப்படும்.

வழிபாட்டுத் தலங்கள்

l அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வழிபாடு இரவு 8 மணி வரை அனு மதிக்கப்படும். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

l சின்னத்திரை மற்றும் திரைப்பட படப் பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப் படும். இருப்பினும், பங்கேற்கும் அனைவரும் பரிசோதனை செய்து கொள்வதுடன் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

l வாடகை மற்றும் டாக்ஸி வாகனங் களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகள், ஆட்டோக்களில் ஓடடுநர் தவிர்த்து 2 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.

l வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடு களில் இருந்து தமிழகம் வருவோரை கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

l சென்னை மாநகராட்சியில் தொற்றை கட்டுப்படுத்த மண்டல வாரியாகவும், இதர மாவட்டங்களிலும் கண்காணிப் புக் குழுக்கள் அமைக்கப்படும்.

l பொதுமக்கள் அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

l 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், அரசு மருத்துவ நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இரண்டு வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

l கரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த நடை முறைகள் அடங்கிய அரசாணையும் நேற்று வெளியிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x