கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்துதற்காலிக பணியாளர்களையும் 8 வாரங்களில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் 9 ஆயிரம் பேர் தற்காலிக பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வந்தனர். பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஏ.சிவக்குமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘கடந்த 1992-ம் ஆண்டு ரேஷன் கடையில் தற்காலிக உணவுப் பொருள் வழங்கும் உதவியாளராக நியமிக்கப்பட்டேன். அப்போது எனக்கு ரூ.16 தினக்கூலி வழங்கப்பட்டது. பணியில் சேருவதற்கு முன்பாகவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தேன். பல்வேறு ரேஷன் கடைகளில் பணிபுரிந்திருந்தும் இதுநாள் வரை என்னை பணிநிரந்தரம் செய்யவில்லை. எனவே என்னை பணிநிரந்தரம் செய்ய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார். இதேபோல ஏராளமானோர் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரிஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அர்விந்த் பாண்டியன், கூட்டுறவு சங்கங்கள் சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் பாலரமேஷ், எல்.பி.சண்முகசுந்தரம், மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் சி.பிரகாசம், கே.செல்வராஜ் உள்ளிட்ட பலர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் அனைத்து தற்காலிகப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்யும் வகையில் தமிழக அரசு, 2001 மார்ச் 21-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் தற்காலிக பணியில் இருந்த 26 ஆயிரம் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 9 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக பணியில் சேரவில்லை, விதிகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதால் அவர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நியமனம்விதிகளுக்கு புறம்பாக இருந்தாலும் அதில் சட்டவிரோதம் இருப்பதாக தெரியவில்லை. அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச தகுதிகளுடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளனர். இவ்வாறு உரிய தகுதிகளுடன் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, கூட்டுறவு சங்கங்களில் தற்காலிகமாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களையும் அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த உத்தரவு வழக்குதொடர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி, வழக்கு தொடராத இதர கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவை 8 வாரங்களில் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்புக்கு வரவேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in