Published : 20 Dec 2020 03:14 AM
Last Updated : 20 Dec 2020 03:14 AM

தற்போதுள்ள கூட்டணி தொடர்ந்தாலும் முதல்வர் வேட்பாளரை பாஜகதான் முடிவு செய்யும் மாநிலத் தலைவர் எல்.முருகன் கருத்து

வரும் சட்டப்பேரவை தேர்தலில் தற்போதுள்ள கூட்டணி தொடர்ந்தாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் தா.பழூரில், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், வேளாண் சட்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் பல்வேறு நன்மைகள் விவ சாயிகளுக்கு கிடைக்கும். இதனால், பாஜகவுக்கு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள நல்ல பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், திராவிட கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும். ஆனால், யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது, யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

‘பி’ டீம் தேவையில்லை

முன்னதாக பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

கமல், ரஜினி ஆகியோர் பாஜகவின் ‘பி’ டீம் கிடையாது. எங்களது கட்சிக்கு ‘பி’ டீம் தேவையில்லை. மறைந்த முதல்வர் எம்ஜிஆர் தமிழக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் 24-வது பக்கத்தில் விவசாயம் குறித்து கூறப் பட்டுள்ளது தான் வேளாண் சட்டமாக வந்துள்ளது. ஆனால், தற்போது விவசாயிகளை ஏமாற்ற திமுக முயற்சிக்கிறது. வேளாண் சட்டத்துக்கு எதிராக ஸ்டாலின் நடத்தும் போராட்டம் மட்டுமல்ல, இனிமேல் எல்லாமே அவருக்குத் தோல்விதான். இச்சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது அல்ல. இவவாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x