Published : 10 Aug 2021 03:15 AM
Last Updated : 10 Aug 2021 03:15 AM

பாடப் புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் :

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதியப் பின்னொட்டுடனேயே அறியப்படுவார்கள். தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் எழுச்சியால் பொதுவெளியில் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர் இட்டுக்கொள்வது வெகுவாகக் குறைந்தது. எனினும், பாடப் புத்தகங்களில்கூட அறிஞர்கள், தலைவர்கள் பலரின் பெயர்கள் அவர்களின் சாதிப் பெயரோடு இணைந்தே அறியப்படுகின்றன. பாடப் புத்தகங்களில் அந்த சாதிப் பெயர்களை தமிழ்நாடு அரசு களைய ஆரம்பித்திருக்கிறது. இதன்படி உ.வே.சாமிநாதையர் இனி ‘உ.வே.சாமிநாதர்’ என்றும் ‘நீலகண்ட சாஸ்திரி’ இனி ‘நீலகண்டர்’ என்றும் ‘மாயூரம் வேதநாயகம் பிள்ளை’ இனி ‘மாயூரம் வேதநாயகம்’ என்றும் அழைக்கப்படுவார்கள். இது குறித்துப் பலரின் கருத்துகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

விஷ்ணு வரதராஜன், முனைவர் பட்ட மாணவர்

சமூகமயமாக்கம் என்ற சொல் ஒன்று உண்டு. ஒரு தனிமனிதராக இவ்வுலகில் பிறக்கும் நாம், ஒரு சமூகத்தின் அங்கமாக மெதுவாக மாறுகிறோம், வெவ்வேறு சமூக அடையாளங்கள் நம் மீது விழுகின்றன, அதற்கேற்றவாறு சலுகைகளும் இழிவுகளும் வந்துசேர்கின்றன. வீடும் கல்விக்கூடமும் சமூகமயமாக்கத்தின் முக்கிய அமைப்புகள். சாதிப் பெயர்கள் சாதியத்தின் இயக்கத்தை இயல்பாக்குகின்றன. மேலும், அவை சமநிலை அற்றதொரு வரலாற்றைச் சுட்டுகின்றன, சாதிப் படிநிலையின் இருத்தலை நினைவுபடுத்துகின்றன, சமச்சீரான வகுப்பறைகள் அமைவதைத் தடுக்கின்றன. எனவே, இப்போது அச்சில் இருக்கும் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது சரியான திசையே. சாதிப் பெயர்கள் தெரியாமல் வளரும் தலைமுறையால் சாதி ஒழியாது. ஆனால், அத்தலைமுறையால் சாதியொழிப்பை நோக்கி மேலும் வலுவாக ஒருங்கிணைய முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x