Published : 28 Jun 2021 03:11 AM
Last Updated : 28 Jun 2021 03:11 AM

‘இந்து தமிழ்’ எதிரொலி: கு.கணேசன் எழுத்துக்கு அங்கீகாரம்! :

கடந்த நாற்பது வருடங்களாக, அனைத்து முன்னணிப் பத்திரிகைகளிலும் டாக்டர் கு.கணேசன் எழுதிவரும் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகன் நான். ஜூன் 25 அன்று, ‘இந்து தமிழ்’ நாளிதழில் ‘அச்சுறுத்தும் டெல்டா ப்ளஸ் வைரஸ்’ என்ற தலைப்பில் அவர் கட்டுரை எழுதியிருந்தார். பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதப்பட்ட கட்டுரை அது. எளிய நடை, ஆழ்ந்த அறிவியல் கருத்துகள் கொண்ட அந்தக் கட்டுரையில், ‘தேவை ஆய்வு மையம்’ எனும் துணைத் தலைப்பின் கீழ் புனேயில் உள்ளதுபோல் தமிழ்நாட்டிலும், அதுவும் சென்னையில் ஒரு வைரஸ் பகுப்பாய்வு மையம் அமைக்க வேண்டும் என்று கு.கணேசன் முன்வைத்த கோரிக்கையானது சமூகத் தொலைநோக்குப் பார்வை கொண்டது. கோரிக்கையை உடனே ஏற்று, அன்று மதியம் 2 மணி தலைப்புச் செய்தியிலேயே சென்னையில் வைரஸ் பகுப்பாய்வு மையம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார் மக்கள் நலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். இது உண்மையில் டாக்டர் கு.கணேசனின் எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் விழிப்புணர்வுக் கட்டுரைகளை உடனுக்குடன் கொண்டுவரும் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு நன்றி. டாக்டரின் எழுத்துக்கும், பத்திரிகைப் பணிக்கும், அரசின் சுறுசுறுப்பான நடவடிக்கைக்கும் இது நல்ல உதாரணம். தொடரட்டும் மக்கள் சேவை.

- டி.என்.ராமசாமி, தலைமை ஆசிரியர் (ஓய்வு).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x