Published : 22 Jun 2021 03:11 AM
Last Updated : 22 Jun 2021 03:11 AM
ஜூன் 20-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளிதழில், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்த முழுப் பக்கக் கட்டுரை வெளிவந்துள்ளது. 1955-ம் ஆண்டு முதல் அரை நுாற்றாண்டு காலமாக இந்தப் பிரச்சினை நீடித்துவருவது குறித்தும், ‘தி இந்து’ நாளிதழ் இது குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருவது குறித்தும் மிக அருமையாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள் கட்டுரை மூலம் இந்தப் பிரச்சினையின் ஆழத்தையும், இருதரப்பு நியாயங்களையும் தெளிவாக உணர முடிந்தது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக 2008 மார்ச் 19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இவ்விஷயத்துடன் தொடர்புடையது என்பதால், நினைவுகூர விரும்புகிறேன். இந்துக் கோயில்கள் பாதுகாப்புக் குழுத் தலைவர் வி.எஸ்.சிவகுமார், ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை கோயில் பரம்பரை அர்ச்சகர் பிச்சை பட்டர் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், கோயில் அர்ச்சனை எந்த மொழியில் இருக்க வேண்டும் என்பதை இந்து சமய அறநிலையத் துறை தலையிட்டு முடிவுசெய்யக் கூடாது; இது குறித்த அந்தத் துறையின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் எலிபி தர்மா ராவ் மற்றும் கே.சந்துரு அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ‘கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை எந்த ஆகம விதியும் தடுக்கவில்லை. காலங்காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் சம்ஸ்கிருத அர்ச்சனையைத் தற்போதைய இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவு மாற்றவில்லை. எந்த மொழியில் அர்ச்சனை வேண்டும் என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் விரும்பினால், கூடுதலாகத் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றே உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பாரம்பரிய அர்ச்சனை முறைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. சம்ஸ்கிருதம் மட்டுமே கடவுளுக்குப் புரியக்கூடிய மொழி, தமிழில் அர்ச்சனை செய்வது கடவுளுக்கு உகந்ததல்ல என்ற வாதத்தை ஏற்க முடியாது’ என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தனர். தற்போதைய சர்ச்சைக்கிடையில் இந்தத் தீர்ப்பின் சாராம்சத்தைக் குறிப்பிடுவது மிக முக்கியம் என்று கருதுகிறேன்.
- ந.இளங்கோவன், உதவிப் பேராசிரியர், சேலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT