Published : 16 Dec 2021 03:05 AM
Last Updated : 16 Dec 2021 03:05 AM

ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது குறித்து : பிசிசிஐ சார்பில் யாரும் என்னிடம் பேசவில்லை : மனம் திறந்தார் விராட் கோலி

ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்குவது தொடர்பாக பிசிசிஐ-யிடம் இருந்து என்னிடம் யாரும் பேசவில்லை. இந்த விவகாரத்தில் தனக்கு முன்கூட்டியே எந்த தகவலும் கூறப்படவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் டி 20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி, உலகக் கோப்பை தொடருடன் விலகினார். இந்நிலையில், ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்துகுறுகிய வடிவிலான தொடர்களுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் டெஸ்ட் தொடரில் கலந்து கொள்வதற்காக கோலி தலைமையிலான இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் செல்கிறது.

இதையொட்டி விராட் கோலிசெய்தியாளர்களிடம் கூறியதாவது:

டி20 உலகக் கோப்பை தொடருடன் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் என எனது முடிவைத்தெரிவித்தபோது, பிசிசிஐ எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை, முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று என்னிடம் கூறப்படவில்லை. இது முற்போக்கான முடிவு என்றும் சரியான திசையில்செல்வதாகவும் கூறினார்கள். அதேவேளையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாகத் தொடர விரும்புகிறேன் என பிசிசிஐயிடம் தெரிவித்தேன்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அணிதேர்வு கடந்த 8-ம் தேதி நடந்தது. தேர்வுக்குழுக் கூட்டம் நடந்து வீரர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்தேர்வுக்குழுத் தலைவர் என்னைதொலைபேசியில் தொடர்புகொண்டார். தேர்வுக் குழுவில் உள்ள நாங்கள் 5 பேரும், உங்களை ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதுதான் நடந்தது. கேப்டன் பதவி நீக்கம் குறித்து பிசிசிஐ சார்பில் யாரும் என்னிடம் பேசவில்லை, முன்னறிவிப்பு ஏதும் கொடுக்கவில்லை.

பலமுறை நான் கூறிவிட்டேன். எனக்கும், ரோஹித் சர்மாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. என்னுடைய நோக்கம், கடமை என்பது இந்திய கிரிக்கெட்டுக்காக விளையாடுவதுதான். என்னைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்க அணிக்குஎதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவேன். எனக்கு ஓய்வு தேவை என்று பிசிசிஐ அமைப்பிடம் நான் கேட்கவில்லை.

ரோஹித் சர்மா திறமையானகேப்டன். வீரர்களை சிறந்த வகையில் கையாளும் திறன் கொண்ட பயிற்சியாளராக ராகுல் திராவிட் உள்ளார். இவர்கள் இருவருக்கும் எனது ஆதரவும், பங்களிப்பும் 100 சதவீதம் இருக்கும். இவ்வாறு விராட் கோலி கூறினார்.

ஆனால், பிசிசிஐ தலைவர் கங்குலி சமீபத்தில் அளித்த பேட்டியில், “டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகப்போகிறேன் எனத் தெரிவித்தவுடன் பிசிசிஐ தரப்பிலிருந்து பேசி, கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் எனக்கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், விராட் கோலி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

குறுகிய வடிவிலான போட்டிகளுக்கு இரு கேப்டன்கள் இருக்கமுடியாது எனத் தேர்வுக் குழுவினர் விரும்பியதால் விராட் கோலி நீக்கப்பட்டார்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x