Published : 15 Dec 2021 03:06 AM
Last Updated : 15 Dec 2021 03:06 AM

தேசிய, மாநில சின்னங்களை - தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை : காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தேசிய, மாநில சின்னங்கள் ஒருபோதும் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது. அதை தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தேசிய சின்னங்கள், அடையாளங்களை காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு தவறாகப் பயன்படுத்தியதாகவும், அதை தடுப்பதற்கான சட்ட விதிகளை காவல் துறையினர் முறையாக பின்பற்றவில்லை என்றும் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சினிமா ஃபைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா, கடந்த2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந் தார்.

இதற்கிடையே, அன்பரசு கடந்த 2019-ல் காலமானார். முகுந்த்சந்த்போத்ராவின் மறைவுக்கு பிறகு, இந்த வழக்கை அவரது மகன் ககன்சந்த் போத்ரா நடத்தி வருகிறார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த வழக்கில் எதிர்மனுதாரராக டிஜிபியை சேர்த்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் தனது உத்தரவில் கூறி யிருப்பதாவது:

விதிமுறைகளை மீறுகின்றனர்

தேசிய சின்னங்கள், மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக புகார் அளிப்பவர்கள் பாதிக்கப்படக் கூடாது. தற்போது பதவியில் உள்ள எம்.பி.க்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகியோரது வாகனங்களில் அரசு சின்னங்களை பயன்படுத்தலாம் என விதிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி, ஓய்வுபெற்ற பிறகும் சிலர் அந்த சின்னங்களை பயன்படுத்துகின்றனர். அரசின் கடைநிலை ஊழியர்கள்கூட இவ்வாறு அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு அனைவரும் அந்த சின்னங்களை பாகுபாடின்றி பயன்படுத்தினால் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் எப்படி அந்த வாகனத்தை நிறுத்தவோ, விசாரிக்கவோ முடியும். எனவே, முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆகியோர் தேசிய, மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை காவல் துறையினர் தடுக்க வேண்டும். இந்த சின்னங்கள் ஒருபோதும் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது.

ஆலோசனை வழங்க வேண்டும்

இதுபோன்ற விதிமீறல்களுக்கு முதல்நிலைக் காவலர்கூட நடவடிக்கை எடுக்கும் வகையில், எவ்வாறு விதிகளை அமல்படுத்தலாம் என்று டிஜிபியும், சென்னை மாநகர காவல் ஆணையரும் ஆலோசனை வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜன.3-க்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x