Published : 15 Dec 2021 03:06 AM
Last Updated : 15 Dec 2021 03:06 AM

எஸ்எஸ்ஏ திட்டத்தில் பணியாற்றும் - தொகுப்பூதிய பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு : மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

எஸ்எஸ்ஏ திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பெண் ஊழியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மகப்பேறு விடுப்பு வழங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட (எஸ்எஸ்ஏ) மாநில இயக்குநர் ஆர்.சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

2017 மகப்பேறு நலச்சட்ட திருத்தத்தின் அடிப்படையில் எஸ்எஸ்ஏ திட்டத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்காக பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன.

தொகுப்பூதிய பெண் ஊழியர்களுக்கு 2 குழந்தைகளின் பிரசவத்துக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும். அதில், பிரசவ தேதிக்கு முன் 6 வாரங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

கருச்சிதைவு ஏற்பட்டால் 6 வாரங்கள் வரை விடுப்பு அளிக்கலாம். எதிர்பாரா சேவை அடிப்படையில் தற்காலிகமாக நியமிக்கப்படும் பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு எடுக்க குறைந்தபட்சம் ஓராண்டு கால பணிக்காலத்தை (விடுமுறை நாட்கள் உட்பட) முடித்திருக்க வேண்டும்.

பெண் ஊழியர், சட்டப்பூர்வமாக 3 மாதத்துக்குள்ளான குழந்தையை தத்தெடுப்பதாக இருந்தால்அந்தக் குழந்தை தத்து கொடுக்கப்படும் நாளில் இருந்து 12 வாரம் மகப்பேறு விடுப்பு பெற தகுதியுடையவர் ஆவார். ஒருவேளை வீட்டில் இருந்து பணிபுரியக் கூடிய பெண்ஊழியராக இருந்தால் முதலில் அவருக்கு உரிய மகப்பேறு விடுப்புவழங்கிவிட்டு, விடுமுறைக்காலம் முடிந்ததும் அவரை வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தலாம்.

மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தொகுப்பூதிய பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x