Published : 05 Dec 2021 04:06 AM
Last Updated : 05 Dec 2021 04:06 AM

கடற்படை தினத்தை முன்னிட்டு போர் நினைவிடத்தில் - தமிழக ஆளுநர் மலர்வளையம் வைத்து அஞ்சலி :

கடற்படை தினத்தை முன்னிட்டு, போர் நினைவிடத்தில் தமிழக ஆளுநர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே1971-ம் ஆண்டு போர் நடைபெற்றது. அப்போது, டிச.4-ம் தேதி அதிகாலை பாகிஸ்தானின், கராச்சி துறைமுகத்துக்குள் நுழைந்த இந்தியக் கடற்படையினர், அங்கிருந்த போர்க் கப்பல்களை தாக்கி அழித்தனர். இப்போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆண்டுதோறும் டிச.4-ம் தேதி இந்தியக் கடற்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை அலுவலகத்தில் கடற்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். ‘ஐஎன்எஸ் சென்னை’ என்ற போர்க் கப்பலின் மாதிரி, நினைவுப் பரிசாக ஆளுநருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு, புதுச்சேரிக்கான கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் புனித் சதா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர்வீரர்களின் நினைவிடத்தில் ஆளுநர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கடற்படை தினத்தை முன்னிட்டு,தார்ஷக், குத்தார் ஆகிய 2 போர்க் கப்பல்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மெரினா கடற்பகுதியில் நேற்று மாலை பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x