Published : 03 Dec 2021 03:06 AM
Last Updated : 03 Dec 2021 03:06 AM

கரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்கள், ஆய்வாளர்களுக்கு - பணி நியமனத்தின்போது முன்னுரிமை அளிக்கப்படும் : தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பு

பணி நியமனம் செய்யும்போது, கரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்த செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பொதுமக்களுக்கு சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்தும் வகையில் 2,448 பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (ஆண்), சுகாதார ஆய்வாளர்கள், 2,448 துணை சுகாதார நலவாழ்வு மையங்களிலும், சுகாதாரத் துறை சார்பில் 4,848 இடைநிலை சுகாதார பணியாளர்களையும் துணை சுகாதார நலவாழ்வு மையத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் (ஆண்), சுகாதார ஆய்வாளர்கள் மற்றும்இடைநிலை சுகாதார பணியாளர்கள், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் செயல்படும் மாவட்ட சுகாதாரசங்கங்கள் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

இதற்கான அறிவிப்பு பத்திரிக்கை மற்றும் தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் மாவட்ட நலவாழ்வு குழுமம் வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட தகுதி அடிப்படை மற்றும் முற்றிலும் வெளிப்படையான முறையில் பணியமர்த்தப்பட தேவையான வழிகாட்டு நெறிகள் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கூடுதல் மதிப்பெண்கள்

கரோனா தொற்று காலத்தில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்களின் பணியைக் கருத்தில்கொண்டு தேர்வு நடைபெறும்போது, கரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்தமைக்கான முன்னுரிமை அளிக்கப்பட்டு, கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. எனவே கரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x