Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM

சேலம், திருச்சி, மதுரை, தென்காசி உள்ளிட்ட - 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு :

சென்னை

தமிழகத்தில் சேலம், மதுரை, தென்காசி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக 17-ம் தேதி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர்,நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை,கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை யும் பெய்யக் கூடும்.

18-ம் தேதி வடதமிழகத்தின் உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக் கூடும். 19-ம் தேதி தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசாகடலோரப் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதைஒட்டிய கேரளா - லட்சத்தீவு கடலோரப் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய கேரள கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் கிழக்குஅரபிக்கடல், கேரளா கடலோரப் பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x