

தனியார் மருத்துவமனைகளில் இலவச கரோனா தடுப்பூசி போடும்திட்டத்தை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.
இந்திய தொழிற் கூட்டமைப்பு,தனியார் மருத்துவமனைகள் இணைந்து தனியார் நிறுவனங்கள்மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கூட்டாண்மை சமூகப் பங்களிப்பு நிதியின் (சிஎஸ்ஆர்) மூலம் இலவச கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.
இத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.பின்னர், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அப்போது, இலவச கரோனா தடுப்பூசி போடும் பணிக்குஇந்திய தொழிற் கூட்டமைப்பு தலைவர் சந்திரகுமார், சிஎஸ்ஆர் நிதியிலிருந்து ரூ.2.20 கோடிக்கான காசோலையும், அடையாறு ஆனந்தபவன் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் கே.டி.சீனிவாச ராஜா,ரூ.7 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வரிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர் (சுகாதாரம்) எஸ். மனீஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்.எழிலன், த.வேலு மற்றும் காவேரி மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் முதல்முறையாக
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வருகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீத தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அரசு சார்பில் இலவசமாகவும், தனியாரில் கட்டணத்திலும் தடுப்பூசி போடப்படுகிறது. தனியாரில் கட்டணம் வசூலிப்பதால் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால், தனியார் மருத்துவமனைகள் 25 சதவீத தடுப்பூசிகளை முழுமையாக கொள்முதல் செய்வதில்லை.
எனவே, இந்தியாவில் முதல்முறையாக தனியார் நிறுவனங்கள்மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சிஎஸ்ஆர் நிதி மூலம், 25 சதவீத தடுப்பூசிகளை முழுவதுமாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாகப் போட நட வடிக்கை எடுக்கப்பட்டது.
முதல்கட்டமாக சென்னை காவேரி மருத்துவமனையில் இலவச கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகத் தடுப்பூசி போடும் பணி தொடங்கும். தமிழகத்தில் இதுவரை அரசு மற்றும் தனியார் மையங்கள் மூலம் 2 கோடியே 15 லட்சத்து 17,446 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.