Published : 11 Jun 2021 03:12 AM
Last Updated : 11 Jun 2021 03:12 AM

சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளையில் உள்ள எல்லா பிரிவுகளும் - ஜூன் 14 முதல் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட உத்தரவு : அனைத்து நீதிபதிகளுக்கும் பணி ஒதுக்கீடு

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள எல்லா பிரிவுகளும் ஜூன் 14 முதல் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல அனைத்து நீதிபதிகளுக்கும் துறைரீதியாக பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

கரோனா 2-வது அலையின் பரவல் தீவிரமடைந்ததையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் குறைந்த எண்ணிக்கையில் நீதிபதிகள் பணியமர்த்தப்பட்டு, அவர்கள் மட்டும் நீதிமன்றத்துக்கு வருகை தந்து வழக்குகளை காணொலியில் விசாரித்து வந்தனர். விசாரணையின்போது அரசு வழக்கறிஞர்கள் நேரடியாகவும், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் ஆன்லைன் மூலமாகவும் ஆஜராகி வந்தனர்.

இந்நிலையில் ஜூன் 14-ம் தேதிமுதல் உயர் நீதிமன்றத்தின் அனைத்து பிரிவுகளும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுழற்சி முறையில் பணி

கரோனா பரவல் குறைந்து வரும்நிலையில் ஜூன் 14 முதல் சென்னைஉயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள அனைத்துப் பிரிவுகளும் 50 சதவீதபணியாளர்களுடன் செயல்பட வேண்டும். வழக்கு விசாரணைகள் காணொலி வாயிலாகவே நடத்தப்படும். துறை அலுவலர்கள் நீதிமன்ற ஊழியர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து சுழற்சி முறையில் கரோனாதடுப்பு விதிகளுக்கு உட்பட்டு நீதிமன்றத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

அதேபோல், மாநிலம் முழுவதும்உள்ள கீழமை நீதிமன்றங்களில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 30 சதவீத பணியாளர்களைக் கொண்டு, ஜூன் 14 முதல் செயல்படவேண்டும். ஆனால் வழக்கு விசாரணை அனைத்தும் காணொலி முறையிலேயே நடத்தப்பட வேண்டும். வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர்களை நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கக் கூடாது. வழக்குகள் தாக்கல் மற்றும் விசாரணைக்கு ஏற்கெனவே உள்ள நடைமுறையைத் தொடர வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஜூன் 11 (இன்று) வரை தலைமை நீதிபதி அமர்வு உட்பட குறிப்பிட்ட நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வுகள் மட்டும் முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தன.

இந்நிலையில், ஜூன் 14 முதல் அனைத்து நீதிபதிகளுக்கும் துறைரீதியாக வழக்குகள் விசாரணை தொடர்பான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x