Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

பொறியியல் மாணவர்களுக்கு - மே 17 முதல் அரியர், மறுதேர்வு :

அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரி மாணவர்களுக்கான மறுதேர்வு மற்றும் அரியர் தேர்வுகள் மே 17-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகிய 4 வளாகக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

இந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டுநவம்பர்- டிசம்பரில் நடத்தவேண்டிய பருவத்தேர்வு கரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அந்த தேர்வுகள் கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இணையவழியில் நடத்தப்பட்டன.

அப்போது, தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக வளாகக் கல்லூரியில் பயிலும் பல மாணவர்களால் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், தேர்வை எழுதாத மாணவர்களுக்கும் மே 3-ம் தேதிமறுதேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டது. இதற்கிடையே கரோனாபாதிப்பு மீண்டும் அதிகரித்ததாலும், ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்களுக்கு நேரில் வரக்கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தியதாலும் மறுதேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

தேர்வு அட்டவணை வெளியீடு

இந்நிலையில், வளாக கல்லூரிகளுக்கான மறுதேர்வு மே 17-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடந்த பருவத் தேர்வுகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் மே 17-ம்தேதி முதல் தேர்வுகள் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, தேர்வுக்கான அட்டவணை அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x