Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

தமிழக கடலோர மாவட்டங்களில் - 9 டிகிரி வரை வெப்பநிலை உயரும் :

சென்னை

தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், வழக்கத்தைவிட 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மே 2-ம் தேதி(இன்று) தொடங்கி 5-ம் தேதி வரைமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், 2, 4, 5-ம் தேதிகளில் சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டங்களிலும் 3-ம்தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி, 5-ம் தேதி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

கடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் 90 சதவீதம் வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலை 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் அடுத்த நாள் காலை வரை புழுக்கமான சூழல் நிலவ வாய்ப்பு உள்ளது.

மே 1-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 5 செமீ, திருப்பூர்மாவட்டம் திருமூர்த்தி அணையில் 4 செமீ, தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடலோரபகுதிகளில் 2-ம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் அலைகள் 1 மீட்டர் முதல் 2.5 மீட்டர் உயரம் வரை எழும்பக் கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x