மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகளை மாநில அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு தீர்ப்பு
மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவுகள் மாநில அரசை கட்டுப்படுத்தும். மேலும் அந்த உத்தரவுகளை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என 3 நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற முழுஅமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மாநில மனித உரிமைகள் ஆணையம், தவறு செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக அபராதம் விதித்தும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தும் மாநில அரசுக்கு உத்தரவிடுகிறது. இந்தஉத்தரவுகளை எதிர்த்து தொடர்புடைய அதிகாரிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுகள் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கட்டுப்படுத்துமா, ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல் நிராகரிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? இழப்பீட்டு தொகையை தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து வசூலிக்குமாறு நேரடியாக உத்தரவிட ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதா? என்பனபோன்ற சட்ட சிக்கல்கள் உள்ளன.
இதற்கு தீர்வு காணும் வகையில்இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன், வி.பார்த்திபன் மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முழுஅமர்வு விசாரிக்க தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள 517 பக்க விரிவான தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ஒருபோதும் மனித உரிமைகளுக்கு பாதிப்பு அல்லது தீங்குநேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவும் மனித உரிமைகளுக்கு சட்ட பாதுகாப்பு, கண்காணிப்பை பலப்படுத்தவுமே சட்டரீதியாக மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் உத்தரவுமற்றும் பரிந்துரைகள் அரசை கட்டுப்படுத்தக் கூடியது. அதை காலம்தாழ்த்தாது உடனடியாக அரசு அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் மனித உரிமைகள் ஆணையத்தின் நோக்கமே சிதைந்துவிடும்.
எக்காரணத்தைக் கொண்டும் ஆணையத்தின் பரிந்துரைகளை தவிர்க்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை. ஒருவேளை தவறினால்,ஆணையம் உயர் நீதிமன்றத்தை அணுகலாம். அதேபோல, ஆணையத்தின் உத்தரவுகளை எதிர்த்து அரசும் நீதிமன்றத்தை நாட முடியும். மனித உரிமை மீறல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை சட்டரீதியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே வசூலிக்கலாம். இதுகுறித்து உரிய நோட்டீஸ் பிறப்பித்து முடிவு செய்யலாம். அத்துடன்தவறு செய்யும் அதிகாரிகள் அல்லது அலுவலர்கள் மீது ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம்.
எனவே, சட்டமியற்றும் அதிகாரம் படைத்த ஆட்சியாளர்கள், மனித உரிமைகள் ஆணையம் பிறப்பிக்கும் பரிந்துரைகளை, அதன் நோக்கம் சிதையாமல் முழுமையாக அமல்படுத்தும் வகையில் தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம்.
இவ்வாறு உத்தரவில் குறிப் பிட்டுள்ளனர்.
