Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால், கடலோர மாவட்டங்களில் நாளை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் 21-ம் தேதி (நேற்று) காலைபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தற்போது சென்னையில் இருந்து 1,200 கி.மீ.தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில்காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, 25-ம் தேதி தமிழக கடற்கரை நோக்கி வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவ.23, 24, 25 தேதிகளில்...
24-ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய அதி கனமழையும் (21 செ.மீ.க்கு மேல்), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி, காரைக்கால் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் (12 முதல் 20 செமீ)பெய்யக் கூடும். இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
25-ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடு துறை, காரைக்கால் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன்கூடிய கன முதல் மிக கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
சென்னைக்கு மழை இல்லை
23-ம் தேதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வங்கக்கடலில் 21-ம்தேதியே உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால், 22-ம் தேதிதெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதி, 23, 24, 25-ம் தேதிகளில் தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி, தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. வேகம்வரை சூறாவளி காற்று வீசக் கூடும்.எனவே மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT