Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு - பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் மீராபாய் சானு :

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டில் மகளிருக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

32-வது ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுகளில் நேற்று போட்டிகள் நடைபெற்றது. இதில் மகளிருக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தனது 4-வது முயற்சியில் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மீராபாய் சானு ஸ்நாட்ச் பிரிவில் 87 கிலோ எடையையும், கிளீன் அன்ட் ஜெர்க்கில் 115 கிலோ எடையையும் தூக்கினார். சீனாவின் ஜிஹுய் ஹூ 210 கிலோ எடையை தூக்கி புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேஷியாவின் வின்டி கன்டிகா ஐஷா 194 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் பெற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் மீராபாய் சானு. இதற்கு முன்னர் கடந்த 2000-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கர்ணம் மல்லேஷ்வரி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். இந்த ஒலிம்பிக்கில்தான் முதன்முறையாக பளுதூக்குதலில் மகளிர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிப் பதக்கம் வென்ற பின்னர் மீராபாய் சானு தனது டுவிட்டர் பதிவில்,"உண்மையில் கனவு நனவான தருணம் இது. இந்தப் பதக்கத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்தப் பயணத்தின்போது உடனிருந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி. நிறைய தியாகங்களைச் செய்து என் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தினருக்கும், குறிப்பாக என் அம்மாவுக்கு நன்றி.

இந்த பயணத்தில் தொடர்ச்சியாக ஆதரவு அளித்து வரும் மத்திய அரசு, விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு, ரயில்வே துறை, விளம்பரதாரர்கள் ஆகியோருக்கு சிறப்பு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தொடர்ச்சியான கடின உழைப்பு, ஊக்குவிப்பு மற்றும் பயிற்சிக்காக எனது பயிற்சியாளர் விஜய் சர்மா மற்றும் உதவி பயிற்சியாளர்களுக்கம் எனது சிறப்பு நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.

வாழ்த்து மழை....

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்து செய்தியில், “ மீராபாய் சானுவின் அற்புதமான செயல்திறனால் நாடு மகிழ்ச்சியடைகிறது. பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பதிவில், “டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கான பதக்க எண்ணிக்கையைத் தொடங்கிய மீராபாய் சானுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x