Published : 25 Jun 2021 03:11 AM
Last Updated : 25 Jun 2021 03:11 AM
காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மூத்த அரசியல் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டுஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கப்பட்டது.ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன்கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்பட்டன. இதனால் காஷ்மீரில் சில மாதங்கள் பதற்றம் நீடித்தது. தற்போது அங்கு முழுமையாக இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதைத் தொடர்ந்து காஷ்மீரை சேர்ந்த அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு பிரதமர்நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இதை ஏற்று காஷ்மீரை சேர்ந்த 8 கட்சிகளின் மூத்த தலைவர்கள், பிரதமர் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர்.
தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், உட்பட 14 தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் 4 பேர் முன்னாள் முதல்வர்கள் ஆவர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் ஜிதேந்திர சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இக் கூட்டத்துக்குப் பிறகு பாஜகமூத்த தலைவரும் காஷ்மீர் முன்னாள் துணை முதல்வருமான கவீந்தர் குப்தா கூறும்போது, "கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களும் காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த விருப்பம் தெரிவித்தனர். தொகுதி வரையறை முடிந்தவுடன் தேர்தல் நடத்தப்படும். ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்" என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும்போது, "காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும். காஷ்மீர் மக்கள் நலன்களை பாதுகாக்கும் சட்டங்களை மட்டுமே அமல்படுத்த வேண்டும். காஷ்மீர்பண்டிட்டுகளை மீண்டும் குடியமர்த்த வேண்டும். சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து போராடியவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் ஆகிய 5 கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தினோம்" என்றார்.
காஷ்மீர் மக்கள் மாநாடு கட்சியின் தலைவர் சஜித் கனி லோனிகூறும்போது, "பிரதமர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் ஆக்கப்பூர்வமாக இருந்தது" என்றார்.
ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்ட பிறகு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. புதிதாக 7 தொகுதிகள் உருவாக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பில் ஜம்மு-காஷ்மீரின் 20 துணை ஆணையர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT