Published : 30 May 2021 03:11 AM
Last Updated : 30 May 2021 03:11 AM

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் ஐபிஎல் டி-20 போட்டிகள் : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை

கரோனா வைரஸ் தொற்றால் பாதியில் நிறுத்திவைக்கப்பட்ட ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் டி 20 தொடர் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலையில் கரோனா தொற்று பரவலால் மே 4-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தொடரின் எஞ்சிய 31 ஆட்டங்களையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பிசிசிஐ-யின் சிறப்புக் பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமை வகித்தார்.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில், ஐபிஎல் டி 20 தொடரின் மீதமுள்ள போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரை நடத்துவதற்கான இறுதிமுடிவை எடுப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் காலஅவகாசம் கேட்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x