Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM

இந்திய சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும் : ட்விட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்திய சட்டத்துக்கு கட்டுப்பட்டு ட்விட்டர் நிர்வாகம் செயல்பட வேண்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு அந்த நிறுவனம் ஆணையிட முடியாது என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமூக வலைதளங்கள், ஓடிடிதளங்கள், செய்தி இணையதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் கடந்தபிப்ரவரியில் புதிய ஒழுங்கு விதிகளை அறிவித்தது. இந்த விதிகள்கடந்த பிப்ரவரி 25-ம் தேதி அரசாணையாக வெளியிடப்பட்டது. புதிய விதிகளை ஏற்றுக் கொள்ள சமூக வலைதளங்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலக்கெடு கடந்த 25-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்தியாவில் மிக அதிகபட்சமாக 53 கோடி பேர் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தி வருகின்றனர். கூகுளின் யூ டியூபை 44.8 கோடி பேரும், பேஸ்புக்கை 41 கோடி பேரும் இன்ஸ்டாகிராமை 21 கோடி பேரும் ட்விட்டரை 1.75 கோடி பேரும் பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்-அப் வழக்கு

பேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை ஒரேநிறுவனத்தை சேர்ந்தவை. இதில் வாட்ஸ்-அப் நிர்வாகம் மட்டும் புதிய ஒழுங்கு விதிகளை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் நிர்வாகங்கள் புதியவிதிகளை ஏற்று செயல்படுவது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளன.

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நேற்று முன்தினம் கூறும்போது, ‘‘இந்திய அரசின் புதிய விதிகளை ஏற்றுசெயல்படுவோம்’’ என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

ஆனால், ‘‘இந்தியாவில் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக எடுக்கப்படும் அச்சுறுத்தல் நடவடிக்கைகள் கவலை அளிக்கின்றன" என்று ட்விட்டர் விமர்சித்துள்ளது.

இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இறையாண்மையுள்ள நாட்டில் சட்டத்தை உருவாக்குவதும் கொள்கைகளை வகுப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை. ட்விட்டர் நிறுவனம் சமூக வலைதளம் மட்டுமே. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு ட்விட்டர் எந்த வகையிலும் ஆணையிட முடியாது. இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என்று சொல்வதற்கு அந்த நிறுவனத்துக்கு எவ்வித உரிமையும் கிடையாது" என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்போதைய நிலையில் வாட்ஸ்-அப், ட்விட்டர் நிர்வாகம் மட்டுமே புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பும் முதல் நபர் யார் என்பதை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று புதிய விதியில் கூறப்பட்டுள்ளது. இதை தனிமனித கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று வாட்ஸ் அப் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "நாட்டு மக்களின் தனிமனித கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. அதேநேரம் நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படுவதையும் மத்திய அரசுஉறுதி செய்ய வேண்டும். நாட்டின்ஒருமைப்பாடு, இறையாண்மைக்குஎதிராக கருத்துகளை வெளியிடுவோர், வன்முறையை தூண்டுவோர், பாலியல் வன்கொடுமையை ஊக்குவிப்போரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவே புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

புதிய விதிகளை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. எனவே வாட்ஸ் அப்பை பின்பற்றி ட்விட்டர் நிர்வாகமும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று கூறப்படுகிறது.

வழிகாட்டும் 5 நாடுகள்

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளின் அரசுகள், சமூகவலைதள நிறுவனங்களிடம் இருந்து தகவல்களை பெறுவதற்காக புதிய சட்டங்களை இயற்றியுள்ளன. சமூகவலைதள விவகாரத்தில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்த 5 நாடுகள் வழிகாட்டியாக உள்ளன.

கடந்த 2019 ஜூலை 30-ம் தேதி 5 நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், "தீவிரவாதம், பாலியல்வன்கொடுமை, அந்நிய சதி, சட்டம்ஒழுங்கு சீர்குலைவு, கடுமையான குற்றங்கள் ஆகிய விவகாரங்களில் சமூக வலைதளங்கள் அந்தந்த நாடுகளின் அரசுகளுடன் ஒளிவுமறைவின்றி தகவல்களை பகிர வேண்டும்" என்று கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் பாணியில் இந்தியாவும் புதிய விதிகளை வகுத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x