Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

கரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு - ரூ.50 ஆயிரம் இழப்பீடு, மாதம் ரூ.2,500 ஓய்வூதியம் : டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் 2-வது அலைநாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. டெல்லியில் கடந்த மாதம் 20-ம் தேதி 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதனால் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து நேற்றைய நிலவரப்படி 24 மணி நேரத்தில் 4,482 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டனர். தொற்று சதவீதம் 6.89 ஆகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பேட்டியளித்தார். அப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்தார். கேஜ்ரிவால் கூறியதாவது:

டெல்லியில் கரோனா தொற்றால் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தாருக்கும் ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும். கரோனாவால் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு அக்குழந்தைகள் 25 வயது அடையும் வரை ரூ.2,500 மாத ஓய்வூதியமாகத் தரப்படும். ஆதரவற்ற நிலையில் இருக்கும் அந்தக் குழந்தையின் கல்விக்கான முழுச் செலவையும் டெல்லி அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும்.

குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் அல்லது குடும்பத் தலைவர் கரோனாவால் உயிரிழந்திருந்தால் அந்தக் குடும்பத்துக்கு மாதம் ரூ.2,500 ஓய்வூதியமாக வழங்கப்படும். கரோனாவால் உயிரிழந்ததற்காக தனியாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். கணவர் உயிரிழந்திருந்தால் மனைவிக்கு மாதம் ரூ.2500 ஓய்வூதியமும், மனைவி உயிரிழந்திருந்தால் கணவருக்கு மாதம் ரூ.2500 ஓய்வூதியமும் தரப்படும். குடும்பத்தில் திருமணமாகாத நபர், அவர்தான் வீட்டில்வருமானம் ஈட்டுபவராக இருந்துஅவர் கரோனாவில் இறந்திருந்தால் ஓய்வூதியத் தொகை பெற்றோருக்கு வழங்கப்படும்.

72 லட்சம் ரேஷன் கார்டுகள்

டெல்லியில் 72 லட்சம் ரேஷன்கார்டுகள் உள்ளன. அவற்றுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாதம் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். அத்துடன் மத்திய அரசு வழங்கும் 5 கிலோ ரேஷன் பொருட்களும் வழங்கப்படும். அந்த வகையில், இந்த மாதம், ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரரும் 10 கிலோ ரேஷன் பொருட்களை இலவசமாக பெறுவார்கள். இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x