Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM

பி.1.617 உருமாற்ற கரோனா வைரஸ் இந்திய வகையை சேர்ந்ததா? : மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு

புதுடெல்லி

பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் இந்திய வகையைச் சேர்ந்தது என்று உலக சுகாதார அமைப்பின் அறிக்கையில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இது தவறான தகவல் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பி.1.617 வகை உருமாற்ற கரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் கரோனா வைரஸ் முதல் அலையை விட இரண்டாவது அலை வேகமாகப் பரவுவதற்கு இந்த வகை வைரஸ்தான் காரணம் என தகவல் வெளியானது. இந்த வைரஸ் உலக அளவில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் தெரிவித்தது. ஆனால் இந்த வைரஸை, இந்தியாவில் உருவானது என்று தெரிவித்து சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பி.1.617 வகை உருமாற்ற கரோனா வைரஸை உலக அளவில் கவலைக்குரியதாக உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியுள்ள செய்தியை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இவற்றில் சில செய்திகளில் பி.1.617 வகை வைரஸை, இந்திய வகை வைரஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறுவதற்கு எவ்வித அடிப்படை ஆதராமும் இல்லை. உலக சுகாதார அமைப்பின் 32 பக்க அறிக்கையில் எந்த இடத்திலும் 'இந்திய வகை வைரஸ்' என்று குறிப்பிடப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த அறிக்கையில் குறிப்பிட்ட விஷயத்தில் இந்திய என்ற வார்த்தையே பயன்படுத்தப்படவில்லை” என்று கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு

இதுபோல், உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வைரஸ்கள் அல்லது அதன் வகைகளை, முதலில் கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர்களுடன் உலக சுகாதார அமைப்பு அடையாளப்படுத்தியதில்லை. அறிவியல் பெயர்களுடன் தான் நாங்கள் அவற்றை அடையாளப்படுத்துகிறோம். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x