Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM

புதிய நாடாளுமன்ற பணியை உடனடியாக நிறுத்துங்கள் : பிரதமருக்கு 12 எதிர்க்கட்சிகள் கடிதம்

நாட்டில் கரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உட்பட 12 முக்கிய எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளன. அதில் கூறி யிருப்பதாவது:

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண்டும். அவற்றை உடனடியாக அனைவருக்கும் இலவசமாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடியை செலவழிக்க வேண்டும்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கான கட்டுமானப் பணிகளை உடனடியாக கைவிட்டு, அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிதியை தடுப்பூசிகள் வாங்குவதற்கும், ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்குவதற்கும் செலவிட வேண்டும். மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்கு 'பிஎம் கேர்ஸ்' நிதியத்தில் இருக்கும் நிதியை பயன்படுத்த வேண்டும்.

வேலையில்லாதவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் 12 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். மாயாவதி, அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் மட்டும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திடவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x