Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

கரோனா நோயாளிகளுக்காக ஆக்ஸிஜன் டேங்கர்களை எக்ஸ்பிரஸ் ரயில்களில் எடுத்து செல்ல ரயில்வே முடிவு :

கரோனா நோயாளிகளுக்காக ஆக்ஸிஜன் டேங்கர்களை எக்ஸ்பிரஸ்ரயில்களில் எடுத்துச் செல்ல ரயில்வே முடிவு செய்துள்ளது என்று ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளதாவது:

நாடு முழுவதும் கரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.இதைத் தடுக்க போதுமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் போதுமான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தேவைப்படும் மாநிலங்களுக்கு அதிக அளவில் ஒரே நேரத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

இந்த ரயில்களில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் (எல்எம்ஓ), ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனுப்பப்படும்.

இதுதவிர ரயில் பெட்டிகளைகரோனா வைரஸ் நோயாளிகளுக்காக மருத்துவமனைகளாக ரயில்வே மாற்றி வருகிறது. ரயில் பெட்டிகளை, கரோனா வார்டாக மாற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். தேவைக்கு ஏற்ப 3 லட்சம் கரோனா நோயாளிகள் படுக்கைகள் தயார் செய்யப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ஆக்ஸிஜன் சிலிண்டர் விநியோகத்துக்காக ரயில்வே அமைச்சகத்தை மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா மாநில அரசுகள் நாடின.அதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x