Last Updated : 23 Feb, 2021 03:15 AM

 

Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் அச்சம் கேரள எல்லைகளை மூடிய கர்நாடகா மகாராஷ்டிர பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு

கர்நாடக மாநில‌த்தின் அண்டை மாநிலங்களான கேரளா, மகா ராஷ்டிராவில் கடந்த ஒரு வார‌மாக கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடகாவிலும் 2-வது அலை ஏற்படும் என்ற பீதி மக்களிடையே எழுந்துள்ளது.

எனவே கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடக அரசு கேரளா,மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடகாவுக்கு வருபவர்கள் கரோனா பரிசோதனை அறிக்கை கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் கர்நாடகாவுடன் இணையும் கேரள மாநில எல்லைகளான மங்களூரு, குடகு, மைசூரு உள்ளிட்டவற்றை கர்நாடக அரசு நேற்று மீண்டும் மூடியுள்ளது. அதேபோல மகாராஷ்டிர எல்லைகளான பெலகாவி,யாதகிரி உள்ளிட்ட மாவட்ட எல்லை பகுதிகளிலும் சோதனைச்சாவடி அமைத்து அம்மாநிலங் களில் இருந்து வருவோரிடம் 72 மணி நேரத்துக்கு முன் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை சான்றிதழை பரி சோதித்து வருகிறது.

இதுகுறித்து கர்நாடக சுகா தாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறுகையில், ‘‘தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறைவாக இருப்பதால் அங்கிருந்து வரு வோருக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை’’ என்றார்.

6 முதல் 8-ம் வகுப்புக்கு பள்ளி திறப்பு

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், கடந்த நவம்பரில் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

டிசம்பரில் 10 மற்றும் 12-ம்ஆண்டு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. மற்றவகுப்புகளை ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 6 முதல் 8-ம்வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப் பட்டது. 11 மாதங்களுக்கு பின் மாணவர்கள் முகக்கவசம், கைஉறைகளுடன் பள்ளிக்கு வந்தனர். பெற்றோரின் ஒப்புதல் கடிதம் பெற்று வந்த மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர்.

இதுகுறித்து கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் கூறுகையில், ‘‘கரோனா தடுப்பு வல்லுநர்கள் குழுவின் ஆலோசனையின் பேரில் பள்ளி கள் திறக்கப்பட்டு பாதுகாப்புடன் செயல்படுகின்றன. மாணவர்கள் அவரவர் வீடுகளில் இருந்து உணவு, தண்ணீர் கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

முதல் நாளில் மாணவர் வருகை 65 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. அடுத்த மாதத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x