Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி 94 சதவீதம் பலன் அளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றி அடைந்திருப்பதாகவும் இந்த தடுப்பூசி 90 சதவீதம் பலன் அளிப்பதாகவும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.
இதுகுறித்து மாடர்னா நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்டிபானி பன்செல் கூறும்போது, ‘‘எங்களது கரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் பலன் அளிக்கிறது. அதாவது எங்களது தடுப்பூசி போடப்பட்ட 100 பேரில் 95 பேர் குணமடைந்தனர். 5 பேருக்கு மட்டும் கரோனா தொற்று இருந்தது. அவர்களுக்கும் பெரிய அளவில் வைரஸ் பாதிப்பு இல்லை. எங்களது தடுப்பூசியை மைனஸ் 20 டிகிரி செல்சியஸில் 6 மாதங்கள் வரை சேமிக்க முடியும்" என்று தெரிவித்தார்.
பைசர் நிறுவன கரோனா தடுப்பூசியை மைனஸ் 75 டிகிரி செல்சியஸில் மட்டுமே சேமித்து வைக்க முடியும் என்பதால் அதனை கடைநிலை வரை கொண்டு செல்வது கடினம் என்று கூறப்படுகிறது. அதேநேரம் மாடர்னா நிறுவன கரோனா தடுப்பூசியை மைனஸ் 20 டிகிரி செல்சியஸில் சேமித்து வைக்க முடியும் என்பதால் இந்த தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க அரசின் கரோனா தடுப்பு பிரிவு தலைமை விஞ்ஞானி அந்தோனி பவுச்சி கூறும்போது, "டிசம்பர் தொடக்கத்தில் அமெரிக்காவில் கரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தோம். எனினும் சில நடைமுறை சிக்கல்களால் டிசம்பர் இறுதியில் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு வரும். அமெரிக்க மக்களில் தேவை உள்ளோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும்" என்றார்.
மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க அரசு ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா, சுவிட்சர்லாந்து, கத்தார், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் மாடர்னா நிறுவனத்திடம் இருந்து கரோனா தடுப்பூசிகளை பெற ஒப்பந்தம் செய்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT