Published : 08 Dec 2021 04:07 AM
Last Updated : 08 Dec 2021 04:07 AM

தேரோட்டத்துக்கு பதில் சர்வபூபாள வாகனத்தில் பத்மாவதி தாயார் அருள் பாலிப்பு :

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவலால், இம்முறையும் பிரம்மோற்சவத்தை ஏகாந்தமாக நடத்த தேவஸ்தானம் தீர்மானித்தது. அதன்படி, திருமாட வீதிகளில் நடத்தப்படும் வாகன சேவை ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக, கோயிலுக்குள் உள்ள வாகன மண்டபத்திலேயே தினசரி வாகன சேவை நடைபெற்றது. காலையும், இரவும் பல வாகனங்களில் தாயார் எழுந்தருளினார்.

இந்நிலையில், 8ம் நாளான நேற்று காலை வழக்கமாக தேர்திருவிழா நடந்திருக்க வேண்டும். ஆனால், இது ஏகாந்தமாக நடத்தப்படும் பிரம்மோற்சவம் என்பதால், தேர்திருவிழா நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக சர்வ பூபாள வாகன சேவையில் பத்மாவதி தாயார் அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து நேற்றிரவு குதிரை வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளினார். இந்நிகழ்ச்சிகளில் ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் ஏகாந்தமாக நடத்தப்பட உள்ளன. பின்னர், மாலை கொடியிறக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதனை தொடர்ந்து 9-ம் தேதி புஷ்பயாகம் நடத்தப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x