Published : 07 Dec 2021 03:08 AM
Last Updated : 07 Dec 2021 03:08 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4-ம் தேதி வரை 3 நாட்களாக மழை நின்று, வெயில் அடித்தது. 5-ம் தேதி இரவு தொடங்கி மீண்டும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரை, அதிகபட்சமாக நாகர்கோவிலில் 88 மிமீ மழை பெய்தது. பெருஞ்சாணியில் 75, புத்தன்அணையில் 73, சிற்றாறு ஒன்றில் 72, களியலில் 62, சிவலோகத்தில் 60, பேச்சிப்பாறையில் 55,சுருளோட்டில் 50, மாம்பழத்துறையாறில் 41, பாலமோரில் 38, ஆனைகிடங்கில் 26, பூதப்பாண்டியில் 31 மிமீ மழை பெய்தது.
மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை நீர்மட்டம் 43 அடியாக உள்ளது. 1,224 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது. 444 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73 அடியாக உள்ளது. 1,480 கனஅடி தண்ணீர் வருகிறது. 1,614 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. சிற்றாறு ஒன்றில் இருந்து 536 கனஅடியும், சிற்றாறு இரண்டில் இருந்து 448 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த மழையால் பத்மநாபபுரம் அரண்மனையில் சிறுகடை பகுதியில் உள்ள கோட்டைச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இல்லதால் சேதம்தவிர்க்கப்பட்டது. கோட்டைச் சுவர் இடிந்ததால் பத்மநாபபுரம் வாளவிளை, ஆர்.சி.தெரு பகுதிக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, கோட்டைச் சுவரின் சேதமடைந்த பகுதியை தாமதமின்றி சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT