Published : 06 Dec 2021 03:07 AM
Last Updated : 06 Dec 2021 03:07 AM

தேசியவாதிகளுக்காக பிரச்சாரம் செய்வேன் : பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பேட்டி :

மதுரா: நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவள் இல்லை. தேர்தலில் தேசியவாதிகளுக்காக பிரச்சாரம் செய்வேன் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

அதிரடியாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் கருத்துகள் கூறுவதிலும் புகழ்பெற்றவர் நடிகை கங்கனா ரனாவத். அண்மையில் 1947-ம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்றது வெறும் பிச்சை என்ற ரீதியில் பேசினார். மேலும், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை காலிஸ்தான்கள் என்றும் விமர்சித்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் அமைந்துள்ள ‘பகவான் கிருஷ்ணர்’ கோயிலுக்கு சென்று நடிகை கங்கனா வழிபட்டார். அப்போது அவரிடம், “2022 உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்வீர்களா?” என செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:

நாம் எல்லோரும் கேள்விப்பட்டு உள்ளதை போல பகவான் கிருஷ்ணரின் உண்மையான ஜனன பிறப்பிடத்தை (சிறைச்சாலை) எல்லோரும் தரிசிப்பதற்கான முயற்சிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் எந்த கட்சியையும் சார்ந்தவள் அல்ல. அதே நேரத்தில் தேர்தலில் தேசியவாதிகளுக்காக பிரச்சாரம் செய்வேன். யார் நேர்மையாகவும், தைரியமாகவும், தேசியவாதிகளாகவும், நாட்டுக்காக பேசுபவர்களாகவும் உள்ளனரோ, அவர்கள் நான் பேசுவதை சரி என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x