Published : 04 Dec 2021 03:09 AM
Last Updated : 04 Dec 2021 03:09 AM

அமலாக்கத் துறை வழக்கில் - மு.க.அழகிரி மகனுக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ய மறுப்பு : தினமும் விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகனுக்கு அமலாக் கத் துறை வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய மறுத்து, வழக்கை தினமும் விசாரித்து விரைவில் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது 2012-ல் கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் நாகராஜன், துரை தயாநிதி உட்பட பலர் மீது மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை 2018-ல் தாக்கல் செய்தனர்.

இந்த முறைகேடு தொடர்பாக சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது அமலாக்கப் பிரிவு தனி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. பின்னர் துரை தயாநிதிக்கு சொந்தமான மதுரை, சென்னையில் உள்ள 25 நிலங்கள், கட்டிடங்கள், வங்கியில் உள்ள நிரந்தர வைப்புத் தொகை என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக முடக்கி அமலாக்கத் துறை உத்தரவிட்டது.

துரை தயாநிதி மீதான அமலாக் கத் துறை தொடர்ந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் துரை தயாநிதி நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் 11.11.2020-ல் சம்மன் அனுப்பியது.

சம்மனை ரத்து செய்யக் கோரி துரை தயாநிதி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்து நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் நிறுவனப் பங்குதாரர் என்ற முறையில் விசாரணையை சந்திக்க வேண்டும். ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்துக்கும், தனக் கும் எந்த சம்பந்தமும் இல்லை என மனுதாரர் கூறியுள்ளார். இவரது இந்த கருத்து அமலாக்கத் துறை விசாரணையின்போது சாட்சிகள் அளித்த வாக்குமூலத்துக்கும், ஆவணங்களில் உள்ளவற்றுக்கும் முரணாக உள்ளது. மனுதாரர் கூறுவது உண்மையாக இருந்தால், அதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.

இந்த மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. விசாரணை நீதிமன்றம் தினமும் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்துக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மனுதாரர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x