Published : 04 Dec 2021 03:10 AM
Last Updated : 04 Dec 2021 03:10 AM

திருச்சி மத்திய மண்டலத்தில் திடீர் சோதனை: குட்கா விற்றதாக ஒரே நாளில் 274 பேர் கைது :

திருச்சி: திருச்சி மத்திய மண்டலத்தில் நேற்று முன்தினம் போலீஸார் நடத்திய சோதனையில் குட்கா விற்பனை செய்ததாக 276 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 274 பேர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும், பொது இடங்களிலும் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை மற்றும் புகையிலைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்குமாறு போலீஸாருக்கு மத்திய மண்டல ஐஜி வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சரகத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டது. காலையிலிருந்து இரவு வரை நடைபெற்ற சோதனையின்போது தடை செய்யப்பட்ட போதை மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக திருச்சியில் 79, புதுக்கோட்டையில் 40, கரூரில் 25, பெரம்பலூரில் 23, அரியலூரில் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோல தஞ்சை சரகத்துக்கு உட்பட்ட தஞ்சாவூரில் 10, திருவாரூரில் 15, நாகப்பட்டினத்தில் 3, மயிலாடுதுறையில் 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஒட்டுமொத்தமாக மத்திய மண்டலம் முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட்ட சோதனையில் 276 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 274 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.1.56 லட்சம் மதிப்பிலான 136 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மத்திய மண்டலத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் தடை செய்யப்பட்ட போதை மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x