Published : 02 Dec 2021 03:06 AM
Last Updated : 02 Dec 2021 03:06 AM
கோவை: கோவை பீளமேட்டில், பெண்களை புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவரிடம் இருந்து 2 துப்பாக்கிகள், பென் டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை ஆவாரம்பாளையம் ரயில்வே கேட் அருகே, நேற்று முன்தினம் இளைஞர் நின்றுகொண்டு, அவ்வழியாக சென்ற இளம் பெண்களை தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தார். இதை பார்த்த பொதுமக்கள் சிலர் அந்த இளைஞரை பிடிக்க முயன்றபோது, அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டினார். தகவல் அறிந்து அங்கு வந்த உதவி ஆய்வாளர் வெள்ளிராஜ் தலைமையிலான காட்டூர் காவல்துறையினர், அந்த இளைஞரை பிடித்தனர். அவரிடம் இருந்த 2 ஏர்கன் வகை துப்பாக்கிகள், ஒரு பென் டிரைவ், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர் நவஇந்தியாவைச் சேர்ந்த சமீர் உல் ஹக்(37) என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. பென் டிரைவை ஆய்வு செய்த போது, பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தன. அவற்றை மார்பிங் மூலமாக ஆபாசமாக மாற்றி, தொடர்புடையவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளார். இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT