Published : 02 Dec 2021 03:08 AM
Last Updated : 02 Dec 2021 03:08 AM

மூலப்பொருட்களின் விலை உயர்வு எதிரொலி - தீப்பெட்டி விலை ரூ.1 உயர்வு :

தமிழகத்தில் 1980-களில் 25 பைசா வுக்கு விற்பனை செய்யப்பட்ட தீப்பெட்டி, 1994-ம் ஆண்டு 50 பைசாவாக உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டு ரூ.1 என அதிகரிக்கப்பட்டது. அதன்பின்னர் விலை உயர்த்தப்படவில்லை.

தீப்பெட்டிக்கு 18 சதவீத மாக இருந்த ஜிஎஸ்டி வரி, உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனாலும், மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின்சார கட்டணம், பெட்ரோல், டீசல் விலைஉயர்வால் அதிகரிக்கும் லாரி வாடகை ஆகியவற்றால் தீப்பெட்டி தொழில் நசியும் நிலை ஏற்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் சிவகாசியில் அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 14 ஆண்டுகளுக்கு பின்னர் ரூ.1 உயர்த்தி, டிச.1-ம் தேதி முதல் 50 குச்சிகள் கொண்ட தீப்பெட்டியை ரூ.2-க்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.

இதுகுறித்து நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் வி.எஸ்.சேதுரத் தினம் கூறும்போது, “அக்டோபர் 10-ம் தேதிக்கு பின்னர் மூலப்பொருட்கள் அத்தனையும் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் தீப்பெட்டியின் விலையும் ரூ.1 அதிகரித்து 50 குச்சிகள் கொண்ட தீப்பெட்டி ரூ.2-க்குவிற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

கரோனா காலத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கடனுக் கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x