Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM
சேலம் மாவட்டம் அக்கம்மாபேட்டை, ஐவேலி கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் (41), ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த வாசு (52), பெருந்துறையை அடுத்த கருமாண்டி செல்லிபாளையத்தைச் சேர்ந்த தமிழ்நேசன் (34) ஆகியோர் இணைந்து கடந்த 2011-ம் ஆண்டு பெருந்துறையில் ‘சுதி ஈமு பார்மஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கினர்.
பின்னர், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என 2 கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்தனர். இதை நம்பி, மொத்தம் 121 பேர் 2.70 கோடி முதலீடு செய்தனர். ஆனால், யாருக்கும் வாக்குறுதி அளித்தபடி பணத்தை அளிக்கவில்லை.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தோக்கவாடியைச் சேர்ந்த டி.பி.பழனிசாமி என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதனடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸார் மூவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஏ.எஸ்.ரவி கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் உட்பட மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, மொத்தம் ரூ.2.47 கோடி அபராதம் விதித்ததோடு, நேரில் ஆஜராகாத தமிழ்நேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். தலைமறைவாக இருந்த தமிழ்நேசனை போலீஸார் தேடிவந்தநிலையில், டான்பிட் நீதிமன்றத்தில் நேற்று அவர் சரணடைந்தார்.
இதையடுத்து, தமிழ்நேசனை போலீஸார் சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT