Published : 30 Nov 2021 03:08 AM
Last Updated : 30 Nov 2021 03:08 AM

வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவராக - திமுகவை சேர்ந்தவர் தேர்வு :

நடைபெறாமல் இருந்த வாலாஜாபாத், லத்தூர் ஒன்றியக் குழுத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

வாலாஜாபாத் ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 21 உறுப்பினர்களில் திமுக சார்பில் 15 பேர் வெற்றி பெற்றனர். அதிமுக சார்பில் 2 பேரும், பாமக சார்பில் ஒருவரும், சுயேச்சையாக 2 பேரும் வெற்றி பெற்றனர்.

கடந்த மாதம் 22-ம் தேதி ஒன்றியக் குழுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருந்தது. அப்போது திமுக சார்பில் தேவேந்திரன், சஞ்சய் காந்தி இருவரும் போட்டியிட விரும்பினர். ஒருவரை மட்டும் நிற்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. தகராறு ஏற்படும் சூழல் உருவானதால், பல உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே தேர்தல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று தேர்தல் நடைபெற்றது. மீண்டும் தேவேந்திரன், சஞ்சய் காந்தி இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இதில் தேவேந்திரன் 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஒன்றியக் குழு உறுப்பினர்களும் இவருக்கு வாக்களித்துள்ளனர். துணைத் தலைவர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த பி.சேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதேபோல் லத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தலும் நேற்று நடைபெற்றது. லத்தூர் ஒன்றியத்தில் திமுக சார்பில் சுப்புலட்சுமி பாபு மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த லட்சுமி ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சுப்புலட்சுமி பாபு வெற்றி பெற்றார். துணைத் தலைவராக பிரேமா சங்கர் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x