Published : 30 Nov 2021 03:09 AM
Last Updated : 30 Nov 2021 03:09 AM

வீட்டுமனைப் பட்டா கோரி முற்றுகை :

தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

`சொந்த வீடு இல்லாத அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட தகுதியான பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும். விதவைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். இத்திட்டங்களைப் பெற இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

போராட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் இசக்கிதுரை, இளைஞர் மன்ற மாவட்டச் செயலாளர் குத்தாலிங்கம் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x