Published : 29 Nov 2021 03:06 AM
Last Updated : 29 Nov 2021 03:06 AM

முதல்வர் அறிவித்த குறைந்தபட்ச கூலி உயர்வு : நடைமுறைப்படுத்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை

தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி உயர்வு சட்டத்தின்படி முதல்வர் அறிவித்த ரூ.425.40 வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பணிபுரியும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச கூலி உயர்வு சட்டத்தின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி முதல் ரூ.425.40 வழங்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அரசு அறிவித்துள்ள சம்பளத்துக்கு குறைவாக இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, தற்போது, தினக்கூலியாக ரூ.395 ரூபாய் பெறுகின்றனர். இந்நிலையில், கூலி உயர்வு தொடர்பான அரசின் இறுதி உத்தரவு வெளியிடும் வரை, சம்பளம் தொடர்பான எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்படுத்துவதில்லை என, தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தொழிலாளர்கள் கூறியதாவது: தேயிலை தோட்டங்களில் கொட்டும் மழையிலும், அட்டைப்பூச்சியின் கடியிலும், வனவிலங்குகளின் அச்சுறுத்தலிலும் உயிரை பணயம் வைத்து, தேயிலை பறிக்கும் பணி செய்கிறோம். நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ. 425.40 வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசின் அறிவிப்பு, தொழிலாளர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், இறுதி உத்தரவு வெளியிடாததால், இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை. தொழிலாளர்களின் கஷ்டத்தை உணர்ந்து, தமிழக முதல்வர் அறிவித்தபடி கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x