Published : 28 Nov 2021 03:06 AM
Last Updated : 28 Nov 2021 03:06 AM

மத்திய அரசிடம் இருந்து - கோமாரி தடுப்பூசி மருந்துகள் வருவதில் தாமதம் : கால்நடை பராமரிப்பு துறை இயக்குநர் தகவல்

மத்திய அரசிடம் இருந்து கோமாரி தடுப்பூசி மருந்துகள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக கால்நடைபராமரிப்பு, மருத்துவப் பணிகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2020-ம் ஆண்டு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மத்தியஅரசிடம் இருந்து பெறப்பட்ட தடுப்பூசிகள், 87.03 லட்சம் மாடுகளுக்கு போடப்பட்டன. 2021-ல் 2-ம் சுற்றுப் பணிக்காக 90 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளன. ஆனால், மத்திய அரசால் தடுப்பூசி மருந்துகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனினும், தமிழக கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் இயங்கும் மருத்துவ நிலையங்களில் பாதுகாக்கப்பட்டு, கையிருப்பில் உள்ள மருந்துகள் மூலம், ஈரோடு, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள எல்லையோர கிராமங்களில் சுமார் 2.69 லட்சம் மாடுகளுக்கு செப்டம்பர் மாதம் தடுப்பூசி போடப்பட்டது.

இதற்கிடையே, மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 28.85 லட்சம் தடுப்பூசிகளை கொண்டு, நவ. 24-ம் தேதி வரை 21.05 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 61.15 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசிகளை மத்தியஅரசிடம் இருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x