Published : 27 Nov 2021 03:07 AM
Last Updated : 27 Nov 2021 03:07 AM

வடகிழக்கு பிராந்தியத்தில்6.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் :

அசாம், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு பிராந்தியத்தில் நேற்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தின் பல பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிசோரம் அருகே மியான்மர் எல்லையில் பூமியில் 35 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி காணப்பட்டது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 5.15 மணிக்குபதிவானது. இதனால் அசாம், மிசோரம், மணிப்பூர் மற்றும் திரிபுராவின் பல இடங்களிலும் மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, அலிப்புர்துவார், டார்ஜிலிங், ஜல்பைகுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிர்வு ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ அல்லது உடைமைகளுக்கு சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

பூமியில் அதிக நிலநடுக்கம் ஏற்படும் மண்டலத்தில் வடகிழக்கு பிராந்தியம் அமைந்துள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

இதற்கு முன் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி அசாம் மற்றும் இப்பிராந்தியத்தின் சில பகுதிகளில் 6.4 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x