Last Updated : 27 Nov, 2021 03:08 AM

 

Published : 27 Nov 2021 03:08 AM
Last Updated : 27 Nov 2021 03:08 AM

16 ஆண்டுகளுக்கு பிறகு கரை புரண்டோடும் பாலாறு : சிங்கம்புணரி, திருப்பத்தூர் மக்கள் மகிழ்ச்சி

சிவகங்கை மாவட்டத்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டோடுவதால் சிங்கம்புணரி, திருப்பத்தூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் செந்துறை, நத்தம் மலைப்பகுதி களில் உற்பத்தியாகும் பாலாறும், உப்பாறும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே இணைந்து பாலாறு என்ற பெயரில் திருப்பத்தூர் கண்மாயை அடைகிறது. அங்கிருந்து விருசுழி ஆறாக பெருக்கெடுக்கிறது.

பாலாற்றில் கடந்த 2005-ம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது. அதன்பிறகு, பல ஆண்டுகளாக பாலாற்றில் பெரிய அளவில் தண்ணீர் செல்லவில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக செந்துறை, நத்தம் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறLு. சிங்கம்புணரியிலும் தொடர்ந்து மழை பெய்தது.

இதையடுத்து 16 ஆண்டு களுக்கு பிறகு பாலாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாலாற்றில் இதுவரை தண்ணீரை பார்க்காத இளைஞர்கள் வேங்கைப்பட்டி, அணைக்கரைப்பட்டி, காளாப்பூர் பாலங்களில் நின்று ரசித்து வருகின்றனர்.

மேலும் பாலாற்றில் தண்ணீர் ஓடுவதால் சிங்கம்புணரி, திருப்பத்தூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், பாலாற்றில் பல இடங்களில் சீமைக்கருவை மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் ஓசாரிப்பட்டி, அணைக்கரைப் பட்டி, சிவபுரிப்பட்டி, விழுப்புனிக்களம், காளாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் புகும் அபாய் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x