Published : 26 Nov 2021 03:07 AM
Last Updated : 26 Nov 2021 03:07 AM

கீழ்மொரப்பூர் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் - ரூ.45 லட்சம் நிதி முறைகேடு செயலாளர் உட்பட 4 பேர் கைது :

தருமபுரி மாவட்டம் கீழ்மொரப்பூர் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தில் நடந்த ரூ.45 லட்சம் நிதி முறைகேடு தொடர்பாக 4 பேரை வணி கவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அரூர் வட்டம் மொரப்பூர் அருகே உள்ள மருதிப்பட்டியில் கீழ்மொரப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில், கடந்த 16.7.2014 முதல் 14.11.2019 வரையிலான ஆண்டுகளின் கணக்குகளில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

தொடர்ந்து, கூட்டுறவுத் துறை தணிக்கையாளர்களின் ஆய்வில் ஒரு மாதத்துக்கு 2 முறை ஊதியம் எடுத்தது, சங்கத்துக்கு தேவையான கட்டிடம் கட்டியதில் நிதி முறைகேடு, சங்கத்துக்கு வந்த வரவு தொகைகளை குறைவாக வரவு வைத்தல் போன்ற வகைகளில் ரூ.45 லட்சத்து 31 ஆயிரத்து 472 முறைகேடு நடந்திருப்பது உறுதி யானது.

எனவே, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை கோரி தருமபுரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் மணிகண்டன் தருமபுரி வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், தருமபுரி வணிகவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவுகாவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற் கொண்டனர்.

அதில், அப்போதைய சங்க செயலாளர் பொன்னுசாமி, சங்க தலைவர் பார்த்திபன், சங்கத்தின் சிற்றெழுத்தர்கள் சிவலிங்கம், கருணாநிதி ஆகிய 4 பேருக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்தனர். அதன்பேரில், 4 பேரையும் நேற்று கைது செய்தனர்.

இவர்களில், பொன்னுசாமி மட்டும் காரிமங்கலம் வட்டம் பொம்ம அள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றி வந்தார். அன்றைய தலைவர் பார்த்திபன் தற்போது பதவியில் இல்லை. சிற்றெழுத்தர்கள் இருவரும் பணி ஓய்வு பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x