Published : 26 Nov 2021 03:08 AM
Last Updated : 26 Nov 2021 03:08 AM

சத்திய ஞான சபை சர்வதேச மையமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் - வடலூருக்கு பல நல்ல திட்டங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் உறுதி

வடலூர் ஆபத்தாணபுரத்தில் நடந்த மனு நீதி நாள் முகாமில் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கடலூர்

வடலூர் ஆபத்தாணபுரத்தில் மனு நீதி நாள் முகாம் நேற்று நடந்தது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர்கள் ரஞ்சித் சிங், பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 448 நபர்களுக்கு ரூ. 1 கோடியே 54 லட்சத்து 10 ஆயிரத்து 998- க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:

வடலூர் சத்திய ஞான சபை சர்வதேச மையமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல நல்ல திட்டங்கள் வடலூருக்கு கொண்டு வரப்படும். பொதுமக்களுக்கு பல நன்மை கிடைக்கும். கேட்டதை கொடுக்கும் முதல்வர் தமிழக முதல்வர். அதனால் மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்கள் தரப்படுகின்றன.

வடலூர் பகுதி என்னை வாழவைத்த பகுதி. தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று தந்த பகுதி.

இந்த மக்களுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன் என்றார்.

முன்னதாக அம்பலவாணன் பேட்டையில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் 835 பயனாளிகளுக்கு துணிமணிகள், 275 குடும்பங்களுக்கு பாத்திரங் கள்,131 குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ1லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் வங்கிகடனுக்கான காசோலையும் ஆக மொத்தம் 1,243 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 79ஆயிரத்து 322 மதிப்பீட்டில் நலத்திட்டங்களை அமைச்சர் வழங்கினார்.

கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, வேளாண் துறை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் ,நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பரந்தாமன், உதவி கோட்ட பொறியாளர் பரமேஸ்வரி, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சையத்அபுதாகீர், குறிஞ்சிப்பாடி வட்டார வேளாண் உதவி இயக்குநர் பூவராகவன், குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x