Published : 26 Nov 2021 03:09 AM
Last Updated : 26 Nov 2021 03:09 AM

தென் மாவட்டங்களில் இடியுடன் பலத்த மழை : ராமேசுவரம் கடலில் சீற்றம் அதிகரிப்பு

மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று இடியுடன் கனமழை கொட்டியது.

வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 5 மணிக்கு நேரத்துக்கும் மேலாக மழை நீடித்தது. இதனால் கோரிப்பாளையம், பாண்டிகோவில் சந்திப்பு, கே.கே.நகர் சாலை உட்பட நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

வைகை ஆற்றிலும் தண்ணீர் கூடுதலாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன், சூறைக்காற்றும் வீசியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு நேற்று (நவம்பர் 25) வரை 906 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் நவம்பர் மாத சராசரி மழையளவு 206 மி.மீ. ஆகும். இது வழக்கத்தைவிட 79மி.மீ. கூடுதலாகும். அதாவது 10 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மி.மீ.ல்):

ராமநாதபுரம்-17.6, மண்டபம்-11, பள்ளமோர்குளம்-5, ராமேசுவரம்-76.2, பாம்பன்-42.1, தங்கச்சிமடம்-30.5, திருவாடானை-8.4, தொண்டி-8.8, தீர்த்தாண்டதானம்-15, வட்டாணம்-8.4, ஆர்.எஸ்.மங்கலம்-5.5, பரமக்குடி-3.9மி.மீ, கமுதி-2.8, கடலாடி-3.2, வாலிநோக்கம்-3.8 மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 15.14 மி.மீட்டராகும்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய மழை இரவு 8 மணி வரை நீடித்தது. இதனால் திண்டுக்கல், பழநி நகர சாலைகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது. கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள அருவிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பழநி மலைக் கோயிலுக்கு செல்லும் படிப்பாதையில் மழைநீர் அருவிபோல் கொட்டியது.

மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளைவிட இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை 25 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

தேனி

தேனியில் நேற்று பிற்பகலில் கனமழை பெய்யத் தொடங்கி மாலை வரை நீடித்தது. இதனால் பெரியகுளம், கம்பம், மதுரை சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. போடி, பெரியகுளம், கம்பம், கூடலூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு வரை மழை பெய்தது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் பிற்பகல் முதல் இரவு வரை மழை கொட்டியது. மானாமதுரை, சிவகங்கை உட்பட பல்வேறு பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 4,966 கண்மாய்களில் 40 சதவீதத்துக்கு மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி உள்ளன.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x