Published : 26 Nov 2021 03:09 AM
Last Updated : 26 Nov 2021 03:09 AM

வீடு, மனை பெற்றவர்களுக்கு கிரையப்பத்திரம் - ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் இன்று சிறப்பு முகாம் :

ஈரோடு வீட்டுவசதி வாரியம் சார்பில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத் தொகை செலுத்தியவர்களுக்கு கிரையப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஈரோடு வீட்டுவசதி வாரியப்பிரிவு சார்பில், ஈரோடு முத்தம்பாளையம், நசியனூர் சாலை மற்றும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் வீட்டுவசதித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்களில் பலர் முழுத்தொகையை செலுத்தியும், பத்திரம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வீட்டு வசதி வாரியத்தில் வீடு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்று முழுத்தொகையை செலுத்தியவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் பத்திரங்களை வழங்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களிடம் இருந்து குறைகேட்பு மற்றும் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஈரோடு சம்பத் நகரில் உள்ள வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில், இன்று (26-ம் தேதி) தொடங்கி 30-ம் தேதி வரை ஒதுக்கீடுதாரர்களுக்கு பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில், வீடு மற்றும் மனை ஒதுக்கீடு பெற்று முழுத்தொகையை செலுத்தியவர்கள் கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என செயற்பொறியாளர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x