Published : 26 Nov 2021 03:10 AM
Last Updated : 26 Nov 2021 03:10 AM

ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை - இலங்கை தமிழர்கள் முற்றுகையிட்டனர் :

அடிப்படை வசதி இல்லாத இடத்தில் குடியிருப்பு கட்டக்கூடாது எனக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை இலங்கை தமிழர்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர், சின்னப்பள்ளிக்குப்பம் ஆகிய இடங்களில் இலங்கை தமிழகர்கள் வசிக்கும் முகாம் உள்ளது. இந்த 2 இடங்களில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இதில், மின்னூர் பகுதியில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு அரசு சார்பில் குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது இலங்கை தமிழர்கள் அடிப்படை வசதி இல்லாத இடத்தில் குடியிருப்பு கட்டக்கூடாது எனக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்துள்ளனர். ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இலங்கை தமிழர்கள் இது தொடர்பாக கூறியதாவது, ‘‘மின்னூர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறோம். 200-க்கும் மேற்பட்டோர் உள்ளோம். கூலிவேலை, கட்டிட வேலை, சிறு தொழில் என செய்து வருகிறோம். இந்நிலையில், தமிழக அரசு இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்புகட்ட இருப்பதை வரவேற்கிறோம்.

இருந்தாலும், அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில் எங்களுக்கு குடியிருப்பு வேண்டாம். மின்னூர் பகுதியில் எங்களுக்காக குடியிருப்பு கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மழைகாலத்தில் மழைவெள்ளம் சூழும் இடமாகும். மேலும் அடிப்படை வசதிகளும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத இடமாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். எனவே, கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ள இடத்தில் எங்களுக்கு குடியிருப்பு கட்ட இடம் தேர்வு செய்ய வேண்டும். ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட இடம் எங்களுக்கு வேண்டாம்’’ என்றனர். இதைத்தொடர்ந்து, தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணனிடம் இலங்கை தமிழர்கள் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x