Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல் :

பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதிகளை ஏற்படுத்தித் தருதல்), விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் ஒப்பந்த சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தம் ஆகிய 3 வேளாண் சட்டங்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பிறகு இந்த சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

தொடர் போராட்டம்

இந்த 3 சட்டங்களும் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி விவசாயிகளின் ஒரு பிரிவினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இந்த 3 சட்டங்களையும் நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பாரதிய கிஸான் சங்கம் (பிகேயு) உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் ஒருங் கிணைந்து கடந்த ஓராண்டாக போராட் டத்தை நடத்தி வருகின்றன.

கடந்த ஜனவரி 26-ம் தேதி நடந்த குடியரசு தின விழாவின்போது டெல்லி யில் பேரணி நடத்திய விவசாயிகள், செங்கோட்டைக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதோடு, விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) தரும் சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

பேச்சுவார்த்தைகள் தோல்வி

விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு சார்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. இதையடுத்து, டெல்லி எல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நீடித்தது. அந்தந்த இடங்களிலேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத் தினர்.

விவசாயிகள் போராட்டம் தொடங்கி, வரும் 26-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி குருநானக் ஜெயந் தியை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

மேலும், விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) அளிப்பது தொடர்பாக ஒரு நிபுணர் குழுவை அமைக்கப் போவதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பை விவசாய சங்கத்தினரும் பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்றனர். அதேநேரத்தில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து வரும் 29-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான முழு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x